இந்திய ஏற்றுமதி கொள்கையும் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை கணிசமான அளவு உயர்த்தும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்துள்ளது. பதனிடப்பட்ட உணவு வகைகளின் ஏற்றுமதியும் மிக பெரும் அளவில் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. மேலும், விதேஷ் க்ரிஷி கிராம் உத்யோக் யோஜனா (VKGUY) திட்டத்தின் கீழ் மதிப்பூட்டப்பட்ட வேளாண் மற்றும் வன பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் தேங்காய் எண்ணெய், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஏலக்காய், சூப், சாஸ், பாஸ்தா மற்றும் பேக்கரி பொருட்கள், தாவர மருத்துவ மூலிகை பொருட்கள் மற்றும் காடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவும், சீனாவும் மிக அதிக அளவில் இந்தியாவிலிருந்து புதினா பொருட்களை இறக்குமதி செய்கின்றன. முக்கியமாக மருந்துகள் தயாரிப்பிலும், பல்பொடி, மெல்லும் மிட்டாய் மற்றும் பான் மசாலா தயாரிப்புகளிலும் பயன்படுகின்றன.தோட்டக்கலைப் பயிர்களில் குறிப்பாக முந்திரி, நறுமணப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் மதிப்பு அடிப்படையில் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. பருவ காலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் அதிக மதிப்புள்ள காய்கறிகளான பீன்ஸ், பட்டாணி, பச்சை மிளகாய், புரகோலி, அஸ்பிரகஷ், காளான், குடை மிளகாய் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறைந்த காரத்தன்மையுள்ள வெள்ளை, மஞ்சள் நிற வெங்காயத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவு தேவை உள்ளது.