இதயகுமாரன் சேர நாட்டின் இரண்டாவது தலைநகரமான வஞ்சி நகருக்குள் நுழைவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவன் சோழ நாட்டிலிருந்து வருவதை அறிந்த காவலர்கள் அவனை உள்ளே செல்ல விடாமல் தடுக்கின்றனர். ஆனால் இதயகுமாரன் தனது புரவியின் உதவியால் வேகமாக நகரினுள் சென்று விடுகிறான். அங்குள்ள காட்டில் யானையின் தந்தத்தால் ஆன அழகிய பெண் சிலையைப் பார்த்து அதை எடுக்கிறான். அப்போது அங்குள்ள காவலர்களை பார்த்து சிலை திருடிய குற்றத்திற்காக கைது செய்யும்படி ஆணையிடும் சேர அரசகுமாரியின் குரல் கேட்கிறது. இதயகுமாரன் அரசகுமாரியை பிணைக்கைதியாக வைத்து அந்தச் சூழ்நிலையை சமாளித்து தப்பிக்கிறான். பிறகு அரசகுமாரியை விடுவித்து அவளின் பிறப்பு ரகசியம் இரத்தினக் கொல்லன் அச்சுதபேரையர் வீட்டில் இன்று தெரியும் எனக் கூறுகிறான்.