மாஸ்கோவுக்கு சென்றதும் நாம் தங்கியிருந்த இஸ்மயிலோவா ஹோட்டலுக்கு சில இலங்கைத் தமிழ் மாணவர்கள் எம்மைத்தேடிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் மூத்த மகன் பாண்டியன். ( கவிஞர் சேரனின் அண்ணன்) இவருக்கும் ஃபுர்னிக்காவை தெரிந்திருந்தது. அவரே என்னை ராதுகா பதிப்பகத்திற்கு அழைத்துச்சென்றார்.
எங்கள் அன்புக்குப் பாத்திரமான சோவியத் எழுத்தாளரும் தமிழ் இலக்கியத்தின் மீது அளவற்ற அக்கறையும் தமிழ் இலக்கியவாதிகளிடத்தே ஆத்மார்த்தமான நேசிப்பும் கொண்ட விதாலி ஃபுர்னீக்கா நினைவில் கலந்துவிட்ட அற்புதமான மனிதர்.
ஃபுர்னீக்கா, சோவியத் நாட்டில் உக்ரேயன் மாநிலத்தில் 1940 இல் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தமது 25 வயது வாலிபப் பருவத்தில் லெனின் கிராட் நகரில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த சமயம் – ஒரு நாள் புத்தகக் கடையொன்றுக்குப் போயிருக்கிறார்.
அங்கே ருஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்திய – தமிழ் கவிஞரின் கவிதை நூல் அவர் கண்களுக்கு எதிர்பாராத விதமாக தென்படுகிறது.
அக்கவிதைகளின் ஆசான் எங்கள் மகாகவி பாரதிதான். அந்தச் சர்வதேச கவியின் – சிந்தனைகளும் சர்வதேச வியாபகமாக உருப்பெற்ற கருத்துக்களும் இந்தத் தொழிலாளியை பெரிதும் கவர்ந்து விடுகிறது.
வாழ்வுக்கு வருமானம் தந்துகொண்டிருந்த தொழிலை உதறிவிட்டு, லெனின் கிராட் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் மாணவராகச் சேர்ந்துவிடுகிறார் விதாலி ஃபுர்னீக்கா.
அன்று முதல் – அதாவது 1965 ஆம் ஆண்டு முதல் – தமது மறைவு வரையிலும் தமிழையும் தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.
இலக்கிய வட்டாரத்தில் பிரசித்தமான ஃபுர்னீக்காவை தமிழ் மக்களில் எத்தனை பேர் அறிந்துள்ளார்கள் என்பது விமர்சனத்திற்குரியது. எனவே இங்கு அவருக்கு சிறிது அறிமுகம் அவசியம் எனக் கருதுகின்றேன்.