பிறரைச் சிரிக்க வைத்த நகைச்சுவைக் கலைஞர் சந்திரபாபுவின் வாழ்க்கை எந்த அளவுக்குச் சோகம் நிரம்பியது என்பதை நெஞ்சைத் தொடும் வகையில், இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் மு.ஞா.செ.இன்பா.
அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம் மக்களின் கனவிலும் நினைவிலும் வாழ்ந்த - வாழ்கின்ற நிழல் உலக ஒப்பனைக் கதாநாயகர்களின் முகமூடிகளைக் கிழித்தெறியவும் தவறவில்லை இந்த நூல்.
ஓரளவுக்கு மேலோட்டமாக சந்திரபாபுவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இந்த நூலில் உள்ள பல தகவல்கள் ஆச்சரியத்தையும், சில தகவல்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும்.
சந்திரபாபு எழுதி, நடித்து இரண்டாயிரம் அடிவரை வளர்ந்த "அப்துல்லா' என்ற திரைப்படம், பின்னர் எப்படி சிவாஜி நடிக்க "பாவமன்னிப்பு' என்ற பெயரில் வெளியானது என்பதையும், அந்தப் படத்தில்கூட மூலக்கதை சந்திரபாபு என்று டைட்டில் கிரடிட் கொடுக்கப்படாததையும் வலியுடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர்.
தமிழ்த் திரையுலகின் தனிப்பெரும் சக்தியாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆரை சந்திரபாபு "மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று பெயர் சொல்லித்தான் அழைப்பாராம். ஆனால் எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை "பாபு சார்...' என்றே அழைப்பாராம். இந்த காரணத்தாலேயே பிற்காலத்தில் தனது படங்களில் சந்திரபாபு இருப்பதைத் தவிர்த்தார் என்று கூறுகிறார் நூலாசிரியர்.