குழந்தை வளர்ப்பு
என்ன அவ்வளவு சிரமமானதா? 'என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? இல்லையா பின்ன?
அதுவும் இந்தக் காலத்துப் பசங்களை வளர்க்கிறது..?' என்று பலர்
முணுமுணுக்கக்கூடும். ஏனென்றால் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாகவும்,
சவால் நிறைந்ததாகவும் இன்றைய பெற்றோருக்கு மாறிவிட்டது.
குழந்தைகளோடு கூடிக்களிப்பதுதான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு
என்பதுபோய், குழந்தைகளைவிட்டு ஒரு ஒருமணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால்
போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க
ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும்
குடும்பங்கள்தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள்.
இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.
'ஒண்ணு வேணும்னா, இப்போவே அது வேணும். அது நடக்கலைன்னா வீட்டையே என் மகன்
ரெண்டாக்கிடுவான். இவனாலேயே எனக்கும் அவனோட அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை
வருது...' - இதுபோல புலம்பாத அம்மாக்கள் இல்லை. விடுமுறை நாள்களில்,
மால்களில் அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அவர்களை அதட்டியபடியே வரும்
பெற்றோர்களையும் பார்க்கத்தானே செய்கிறோம்!