சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.
ஆராய்ச்சி முறையில் இன்ன இன்ன நிகழ்ச்சிக்கு இன்ன இன்னது ஆதாரம் என்று சொல்லாமல், இலக்கிய ஆதாரங்களையெல்லாம் **தொகுத்து அவற்றிலுள்ள செய்திகளை ஒருவாறு கோவைப்படுத்திக் கற்பனையென்னும் பசையால் இணைத்து உருவாக்கியது இவ்வரலாறு. நிகழ்ச்சிகளினூடே உள்ள உணர்ச்சியை வெளிப்படுத்த வருணனைகளையும், உரையாடல்களையும் இடையிடையே அமைத்திருக்கிறேன். புத்தகத்தைப் படித்த பிறகு, ஒரு பேரரசனுடைய வரலாற்றை உணர்ச்சியோடு தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி நிலவவேண்டும் என்பதே என் கருத்து.