சமூக அந்தஸ்து எனும் கருத்தாக்கம் மரபுச் சமூகங்களை விளக்கப் பயன்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் சமூக அந்தஸ்து எனும் கருத்தாக்கம் மரபுச் சமூகங்களை நிலைப்படுத்தும் கருத்தாக்கம். மரபுச் சமூகங்களை நிலைபேறு உடையவையாகச் செய்யுமொரு பண்பு அந்தஸ்து எனும் கருத்தாக்கத்திற்கு உள்ளது. சாதி எனும் நிறுவனம் குடும்பம், பிறப்பு, மண உறவுகள் ஆகியவற்றின் மூலம் தன்னை மறு உற்பத்தி செய்துகொள்ளுகிறது. எனவே இக்கருத்தாக்கத்தைப் பயன்படுத்தும்போது அத்தோடு அதன் நிலைபேற்றுப் பண்புக்குள் நாம் சிக்கிக்கொள்ளுகிறோம். இது ஒரு வஞ்சக வலை. சாதி எனும் கருத்தாக்கத்தைச் சமூக விளக்கக் கருவியாக ஒரு குறிப்பிட்ட எல்லைவரையில் பயன்படுத்தலாமே தவிர அதனைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்த முடியுமா என்ற வினா இந்த இடத்தில் எழுகிறது. வர்க்கம் என்ற கருத்தாக்கம் புனிதம், பிறப்பு, மண உறவுகள் போன்றவற்றோடு தொடர்புபடாமல் இருப்பதால் அதற்கு நிலைபேற்றுப் பண்பு கிடையாது. மார்க்சின் வர்க்கம் என்ற கருத்தாக்கம் வர்க்கப் போராட்டம் என்ற கருத்தோடு இணைந்து சமூக மாற்றப் பண்பைச் சுவீகரித்திருப்பதைக் காணவேண்டியுள்ளது.