பெரியார் தனது தத்துவ நிலைப்பாட்டை மெட்டிரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் என ஒத்துக்கொண்டு பேசியுள்ளார். அவர் உலகாயதம் எனப்பட்ட சாருவாகத் தத்துவத்திற்கு நெருக்கமாக நின்றவர் என அறியப்படுகிறார். உலகாயதர்கள் பண்டைய இந்தியாவில், பஞ்சபூதச் சேர்க்கைகளால் உலகின் எல்லாப் பொருட்களும் சீவராசிகளும் கூடத் தோன்றியுள்ளன, எனவே இறைவன், ஆன்மா, மறுபிறப்பு, மோட்சம், நரகம் என்று எதுவுமில்லை என்று கூறினார்கள். வைதீக வேள்விகள், புரோகிதத் தொழில், சடங்காச்சாரங்கள் போன்றவற்றை அவர்கள் தீவிரமாக மறுத்தார்கள். இந்நிலைப்பாடுகளைக் கொண்டு தந்தை பெரியாரை ஓர் உலகாயதர் என எடுத்துக்காட்டுவது சரியாகவே இருக்கும். இருப்பினும், கூடுதலாக “பகுத்தறிவு” என்ற கோட்பாட்டைத் தமிழில் குறித்துநின்றவர் பெரியார் என அவர் அறியப்படுகிறார். மேற்கத்திய நாடுகளில் நவீன காலத்தில் முன்கை எடுத்து அதிகம் அறியப்பட்டிருந்த பகுத்தறிவே பெரியாரால் உள்வாங்கப்பட்டது என இதனைக் குறிப்பிடலாம். பெரியார் தனது உரைகளில் பல இடங்களில் ஐரோப்பியரின் விஞ்ஞான முறை, சயன்ஸ் என்ற சொற்களைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இந்நிலையில், பெரி யாரின் பகுத்தறிவுக்கு இந்திய மெய்யியலில் அடிப் படைகள் உண்டா? என நாம் உற்றுப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே “பௌத்தமும் பெரியாரும்” என்ற இந்தத் தலைப்பினைக் கொள்ள வேண்டும்.