இயற்கை – இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.
இந்த விசயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா? இதனைச் சரியாகக் கற்றுக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போது கணினியும், ஆடம்பரத்திற்குத் தேவையான உபகரணங்களும் பெருகி உள்ளதால் இதனைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமே என்று எத்தனை பேர் அறிந்து செயல்படுகிறோம் என்று தெரியவில்லை.
இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே.