திண்டுக்கல் நகர், மதுரை சாலையில் அமைந்துள்ள பேகம்பூர், இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் பகுதி. பேகம்பூரை சுற்றியிருக்கும் பூச்சிநாயக்கன்பட்டி, யூசுபியா நகர், முகமதியர்புரம், அசனாத்புரம், சவேரியார்பாளையம், மேட்டுப்பட்டி போன்ற பகுதிகளில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் மதங்களைச் சேர்ந்தவர்கள் கதம்பமாக வாழ்கிறார்கள். முக்கியமாக நாயுடு சமுதாயமும் இஸ்லாமிய சமுதாயமும் ஒருவரையொருவர் மாமன், மாப்பிள்ளை என உறவு பாராட்டி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். ரம்ஜான் பண்டிகையில் பிரியாணியும், தீபாவளிப் பண்டிகையில் பலகாரங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேக்கும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள்.
மதுரையில் புரோட்டா பிரபலமாக இருப்பது போல், திண்டுக்கல்லில் பிரியாணி பிரபலம்! முக்கியமாக நாலைந்து பிரியாணி ஹோட்டல்கள் மிகப் பிரபலமாக இயங்குகின்றன. வெளியூரிலிருந்து காரில் வரும் சுற்றுலா பயணிகள், அந்த ஹோட்டல்களின் முகவரியைக் கேட்டு சாலையோரங்களில் விசாரிக்கும் காட்சிகளை தினமும் காணலாம். ஓரிரண்டு பிரியாணி ஹோட்டல்கள் சென்னையிலும் அதன் கிளைகளைத் திறந்திருக்கின்றன. திண்டுக்கல்லை பிரியாணி சிட்டி எனலாம்.
மதுரை சாலையில் அமைந்திருக்கும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ஒரு கல்லறை உள்ளது. அதில் பெர்சிய மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. அதிலிருந்து, இக்கல்லறை மீர் சாயிபு என்றழைக்கப்பட்ட மீர் ரசலி கானின் துணைவியாரான அமீர் உன் நிசா பேகம் அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஹைதர் அலியின் துணைவியாருடைய சகோதரியின் கணவரான மீர் சாயிபுவின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் பகுதி கி.பி. 1772 முதல் 1782 வரை இருந்துள்ளது. கல்லறையில் துயிலும் அமீர் உன் நிசா பேகம் நினைவாகவே இப்பகுதி பேகம்பூர் என அழைக்கப்படுகிறது.