இந்நூலிலுள்ள பல விடயங்களைக் காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தேவையிருந்ததனாலும், 1980ஆம் ஆண்டுக்குப் பின்புள்ள கூட்டுறவுத் தொடர்பிலான தகவல்கள் சேர்க்கப்பட வேண்டியிருந்ததனாலும் அவசியமான திருத்தங்களைப் புதிய தகவல்களுடன் மீள் பிரசுரம் செய்யவேண்டிய தேவையை உணர்ந்ததும், திருத்தியமைக்கும் முயற்சியை ஏற்றுச் செய்யும்படி இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனத்தைச் சேர்ந்த உசாத்துணை ஆலோசகர் திரு. சி. கோணேஸ்வரன் அவர்களின் துணையை நாடினோம். அவர் இப்பாரிய பொறுப்பை முன்வந்து ஏற்று மிகவும் குறுகிய காலத்திற் சிறந்த அர்ப்பணிப்புடன் நிறைவு செய்தமை பாராட்டிற்குரியதாகும். அவரின் பங்களிப்பு இந்நூலின் பயன்பாட்டை மேலும் அதிகரித்துள்ளதென்பதை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றோம். இந்த வகையில் எமது கோரிக்கையை அவர் நிறைவேற்றத் துணைபுரிந்த இலங்கை கூட்டுறவு முகாமை நிறுவனத்தின் தலைவர் திரு. ஈ. எஸ். விக்கிரமசிங்க அவர்களுக்கும் பொது முகாமையாளர் திரு.வை. ரத்நாயக்க அவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றி உரித்தாகும்.
இந்நூலுக்கான அணிந்துரையை நல்கியதோடு வேண்டிய ஆலோசனைகளைத் தந்த வடக்கு கிழக்கு மாகாணக் கூட்டுறவு ஆணையாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அவர் இந்நூலின் சட்டம் சம்பந்தமான சில பகுதிகளை ஆக்கி உதவியதோடு ஏனைய பகுதிகளை மெருகூட்டவும் வேண்டிய ஆலோசனைகளை வழங்கியுள்ளமை இந்நூலுக்கு மேலும் சிறப்பினைத் தந்தள்ளது.