பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.