நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல எட்டடிக்கு மேலே விலகி நிற்கவில்லை என்றாலே தீட்டு ஆகிவிடும். ஈழவர் புலையருக்கு எட்டடி தள்ளி நிற்க வேண்டும். ஆகவே பொதுப்பாதைகளில் நடமாடுவது, பொது இடங்களுக்கு வருவது போன்ற சமூகச் செயல்பாடுகளெல்லாமே சமூகத்தில் ஏறத்தாழ அனைவருக்குமே மறுக்கப்பட்டன.