இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்றால், அதில் ஒரு வகைப்பாடாக விளங்குகின்ற கட்டுரைகள் நுண்ணோக்கிகளாக இருக்கின்றன. சமூகச்சிக்கல்களை, தகுந்த ஆதாரங்களுடனும், தார்மீக ஆவேசத்துடனும் அலசி எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலான நேரங்களில் அச்சமூகச் சிக்கல்களுக்கு தீர்வாகவும் அமைந்துவிடுகின்றன். தத்துவங்களும் தீர்வாகவும் அமைந்துவிடுகின்றன. தத்துவங்களும், கோட்பாடுகளும் இவ்வகையான கட்டுரைகளையே மூல வேராகக் கொண்டு உருவாகின்றன என்பது அறிஞர்கள் கண்ட உண்மை.
இந்த நூலில் அழகிய பெரியவன் எழுதிய பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு, இந்தியா டுடே, சண்டே இண்டியன், தலித் முரசு, ஆதவன் பார்வை, காலச்சுவடு, தம்மா ஆகிய மாத, வார இதழ்களில் பல்வேறு தருணங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. புனைவிலக்கியத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இந்நூலாசிரியர். கட்டுரை இலக்கியத்திலும் அழுத்தமாக தடம் பதித்திருப்பதை இவைகளைப் படிக்கும்போது வாசகர்களால் உணர்ந்துக்கொள்ள முடியும்.