சற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப்
பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக்
கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை
வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல. உள்ளுக்குள் எதைச் சொல்ல
நினைத்தாலுமே கூட, ஒரு கருத்துக்கு உருவாக்கப்படுவது சிறுகதையல்ல என்பதே
என் நம்பிக்கை. மனதில் வந்து விழும் விதை இருப்புக்கட்டி மெல்ல முகிழ்த்து
முளைக்க வேண்டும். அது நன்கு விளைவதற்கு அனுபவமும், மொழியும், கருத்தறமும்
துணைப் பொருட்கள். அன்றாடம் தொகுப்புக்கு ஒரு குறிப்புண்டு. பெரும்பாலான
கதைகள் கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. வேறு வேறு களங்களில் எழுதிப்
பார்த்திட முனைந்தவை. ஒருசேர பார்க்கையில் இதில் காமத்தையும்
சாதியிழிவையும் பிணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புவி முழுமைக்கும்
காமம் மனிதனை உந்தும் காரணியாக இருக்கிறது. இந்தியாவில் காமத்தோடு
சேர்ந்து சாதியும் மனிதரை இயக்குக்கிறது. இரண்டும் இணையும் உளவியல்
புள்ளிகள் முக்கியமானவை. இரண்டின் விளைவுகளும் தீவிரமானவையாகவும் குரூரமாய்
அலைக்கழிப்பவையாகவும் உள்ளன. இக் கதைகளுக்கு ஆனந்த விகடன், உயிர்மை,
தலித், நீலம் ஆகிய இதழ்கள் தமது பக்கங்களை அளித்தன.