சில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தது. அதன் தொகுப்பே இந்த இடுகை. இதில் ஏதேனும் தவறாக இருப்பின் அது எனது அறியாமை என்று அறிக.
மனோ புத்யஹங்கார சித்தாநினாஹம்ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரேந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுசிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்.
[நான் மனமல்ல, நான் அறிவல்ல, நான் அகங்காரமல்ல, இதயமோ, கண்களோ, நாக்கோ நானல்ல, மூக்கும் நானல்ல, நான் ஆகாசமோ-பூமியோ அல்ல, நான் ஆற்றலோ, காற்றோ அல்ல, என்றும் வாழு அழிவற்ற இன்பமான சிவ ஸ்வரூபமே நான்.]
மேலே இருப்பது சங்கரர் அருளிய நிர்வாண அஷ்டகத்தில் வரும் ஸ்லோகம். இந்த ஸ்லோகமானது ஆசார்யர் தமது குருவைத் தேடி நர்மதை நதிக்கரையில்செல்கையில் கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரிடத்தில் யார் நீ? என்று கேட்கையில் ஆசார்யாரால் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட பகவத்பாதர் புளகாங்கிதமடைந்து நமது ஆச்சார்யரை சிஷ்யனாக ஏற்றார் என்கிறது சங்கர விஜயம்.
அறிவை, ஞானத்தைப் பெறத்துடிக்கும் சிஷ்யன் 'தான்' என்ற எண்ணமின்றி, குருவிடத்தில் முழுமையான நம்பிக்கையுடன் பாடம் கேட்க வேண்டும் என்பதைக் குறிப்பது இந்த ஸ்லோகம். ஆதி சங்கரர் தமது அபரோக்ஷானுபூதி என்னும் நூலில் குருவிடத்தில் இருக்கும் சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பட்டியலாகச் சொல்லியிருக்கிறார்.