ஒரு பொருளுக்கு மக்களிடையே மதிப்பு ஏற்படும்போது அதைப்போன்ற போலி ஒன்றும் கூடவே தோன்றும். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சான்றாக, கதர் வாணிபம் நன்றாக நடக்கிறதென்றால், சில மோசக்கார வியாபாரிகள் போலிக்கதர் தயாரித்து மக்களை ஏமாற்றுவார்கள். அதுபோலவே சீர்திருத்தக் கொள்கைக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறதென்றால், அதைக்கொண்டு வயிறு வளர்க்க போலிச் ‘சீர்திருத்த வாதிகள்’ புறப்பட்டு விடுகின்றனர்.
அரசியலுக்கு கட்சி அமைக்கலாம். கடவுள் நெறியைப் பரப்புவதற்கும் ஸ்தாபனங்கள் நடத்தலாம். ஆனால் சமூக சீர்திருத்தப் பிரச்சாரம் மூட நம்பிக்கையை எதிர்க்கும் புரட்சி தனிப்பட்ட அறிஞர்களால் நடத்தக்கூடியதேயன்றி கட்சி வைத்துப் பிரச்சாரம் செய்யக்கூடியதன்று. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று டிக்கெட்டை வைத்து மாநாடு நடத்தி சினிமாவுக்குக் கதை எழுதி, அதுதான் சீர்திருத்தம் என்று பறையடிப்பதுமல்ல. சரியாகச் சொன்னால் செயலிலும் சரி. பிரச்சாரத்திலும் சரி, சீர்திருத்தவாதிகள் தேசிய முகாமில்தான் தோன்றியுள்ளனர்; இன்னமும் தோன்றி வருகின்றனர். தேசபக்த வாட்டாரந்தான் சீர்திருத்தவாதிகள் தோன்றுவதற்குச் சரியான முகாமாகும். தேச மக்களின் நலன்களை அந்நியர்களுக்கு விற்றுக் கொடுத்துத் தன்னலத்தைப் பேணும் தேசத் துரோகிகள், சீர்த்திருத்தப் போலிகள் தோன்றலாம்.ஆனால் அவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள்.