கலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மிகையற்ற இயல்பு கொண்ட உணர்வுச் சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன. அந்நிய தேசமும் சூழலும் தருகிற அனுபவங்களைப் பேசுகிற கதைகள் இவை. வாசிப்பு சார்ந்த அளவுகோல்கள் நாமாக உருவாக்கிக் கொள்கிறவை. விருப்பு வெறுப்பற்று திறந்த மனத்துடன் வாசித்தால் இந்தக் கதைகள் புதிய உளத் திறப்புக்களை அளிப்பவையாக உள்ளன. உணர்வுவெளியில் இந்தக் கதைகளின் ஜீவன் உயிர்த்திருக்கும். சிருஷ்டி எப்படி படைப்பாளனை பேசச் சொல்கிறதோ, அது போல வாசகனுடனும் இந்தப் படைப்புகள் தங்களுக்கான உரையாடலை நிகழ்த்தும்.