நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் தெய்வங்களை, காவல் தெய்வங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐயனார், மதுரைவீரன், பாடிகார்ட் முனீஸ்வரர் போன்றவர்களை கேள்விப்பட்டதோடு சரி, அதற்கு மேல் தெரிந்ததெல்லாம் தமிழ் சினிமா மூலமாகத் தான், அதுவும் பல சமயங்களில் கதையின் போக்குக்காக இந்தத் தெய்வங்களை மேலோட்டமாகத் தான் காட்டியிருப்பார்கள். என் போன்ற கிராமத்து வாசமே இல்லாதவர்களுக்குப் பல சமயங்களில் இந்தத் தெய்வங்களைப் பார்த்தாலே ஒருவித பயமாகயிருக்கும் – யோசித்துப் பார்த்தால் அந்தப் பிம்பத்திற்குத் தமிழ் சினிமாவும், என் அறியாமையும் தான் காரணமாக தோன்றுகிறது.