வெற்றியின் திறவுகோல் கல்வி, நாளைய சிறந்த குடிமக்களை உருவாக்குவதும் கல்வி எனப் பேசினார் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா.
திண்டுக்கல் மாவட்டம் ம.மு.கோவிலூர் சி.எஸ்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட, முதல் பிரதியை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் பெற்றுக் கொண்டார். அப்போது ஆளுநர் பேசியதாவது:
அறிவை மட்டும் வளர்ப்பதாக கல்வி இருந்துவிடக் கூடாது. தேசத்தின் மேல் பற்று உள்ளவர்களாகவும், தேசியத்தின் அடையாளமாகவும், மனிதநேயம் மிக்க மாணவர்களை உருவாக்குவதாக கல்வி அமைய வேண்டும். அத்தகைய கல்வியைப் போதிக்கும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட வேண்டும். இது போன்ற நிறுவனங்கள் தான் தரமான கல்வியை வழங்கும் புகழ்மிக்க நிறுவனங்களாக இருக்க முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார்.