எல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிடக்கூடிய, விலைமதிக்க முடியாத ஓர் அம்சமான
உற்சாகத்தைப் பற்றித்தான் இப்புத்தகம் பேசுகின்றது.வாழ்க்கை எப்போதும்
சுகமானதாகவும் இலகுவானதாகவும் இருப்பதில்லை . பிரச்சனைகள், வலிகள்,
சவால்கள், விரக்திகள் ஆகியவை அதில் இரண்டறக் கலந்துள்ளன. இந்த யதார்த்தத்தை
இப்புத்தகம் முழுமையாக அங்கீகரிக்கிறது. ஆனால் அதற்கான தீர்வை இப்புத்தகம்
அளிக்கிறது. கண்டிப்பாகப் பலனளிக்கும் ஒரு தீர்வு அது. நடைமுறையில்
ஏராளமான எதிர்மறைகள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும் உங்களால்
சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ முடியும்.
நீங்கள் உற்சாகத்தோடும் உயிர்த்துடிப்போடும்,
சுவாரசியத்தோடும் இருப்பதைப் பற்றியதுதான் இப்புத்தகம்.நீங்கள்
சுவாரசியமற்ற, மந்தமான, ஆட்டுமந்தைத்தனமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய
அவசியம் கிடையாது. அப்படிப்பட்டதொரு நிலையை ஒருபோதும் ஏற்றுக்
கொள்ளாதீர்கள். நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சரி, எவ்வளவு
வலியுடையதாக இருந்தாலும் சரி, எவ்வளவு ஊக்கமிழக்க வைப்பதாக இருந்தாலும்
சரி, உயிர்த்துடிப்புடன் கூடிய ஒரு வாழ்க்கையை நிச்சயமாக உங்களால் வாழ
முடியும் என்பது உறுதி.
உங்களால் உங்களுடைய வேலையில் புதிய உத்வேகத்தைப் புகுத்த
முடியும். எல்லாவற்றையும் மேம்பட்டதொரு வழியில் உங்களால் மேற்கொள்ள
முடியும். நீங்கள் விரும்பினால், உற்சாகம் பொங்கி வழியும் ஒரு வாழ்க்கையை
உங்களால் கண்டிப்பாக வாழ முடியும். அதை யார் தான் விரும்ப மாட்டார்கள்?
இப்புத்தகம் பரிந்துரைக்கும் விஷயங்களை நான் முழுமையாக
நம்புகிறேன். உற்சாகம் பலருடைய வாழ்க்கையில் மாபெரும் மாயாஜாலங்களை
நிகழ்த்தியுள்ளதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அது கண்டிப்பாக வேலை
செய்கிறது.