நமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி நமது கை, நகம் இவற்றைப் பார்த்து நோயிற்கான அறிகுறிகளை கண்டு பிடிக்கிறார்களோ, அதேபோல் நமது கண்களைப் பார்த்தும் நோயை கண்டு பிடிக்க முடியும். இத்தனை சிறப்பு வாய்ந்த நமது கண்களை சுற்றி கருவளையம் தோன்றினால், அந்தத் தோற்றம் நம்மை சுத்தமாகச் சோர்வுள்ளவராகக் காட்டும்.
கண்டதும் கவரும் நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? அதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது போன்ற வழிமுறைகளைச் சொல்கிறார் அழகுக் கலை நிபுணர் ஹேமலதா.கண்களுக்கு கீழே தோன்றும் கருவளையமும் ஒருவிதமான தோல் பிரச்சனைதான். கருவளையம் வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும் மிகவும் முக்கியமானது நமது உடல் ஆரோக்கியம் சரியில்லை என்பதே. நம் முகத்தில் தோன்றும் அலர்ஜி, தழும்பு, முகப்பரு, பிக்மென்டேஷன்(நிறமி செயல்பாடு) இவற்றைப் போலவே கருவளையத்தையும் பார்த்தவுடன் நம்மால் கண்டு பிடிக்க முடியும்.