இவர் இலக்கியப்படைப்பைத் தனித்து ஆராய முடியாதென்றும் அதனை ஆக்கியவரது ஆளுமையையும் உளக் கோலங்களையும் உளநிலையையும் ஒன்றிணைத்து ஆராயும் பொழுதுதான் முழுமையைக் கண்டறிய முடியும் என்றும் வலியுறுத்தினார். மேலும் படைப்போடு இணைந்துள்ள சூழல் நிலவரங்கள் மீதும் பண்பாட்டுக் கோலங்கள் மீதும் கவனம் செலுத் தப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்படல் வேண்டும் என்றார்.
இந்தப் பின்னணியில் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனாரைப் புரிந்து கொள்வதற்கான தருக்கவியல் பண்புகளை வீ. அரசு நமக்குத் தந்துள்ளார். குறிப்பாக இந்த நூலுருவாக்கப் பணி இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது. வள்ளலார் (1823-1874) ஆறுமுகநாவலர் (1822-1879) மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (1855-1897) மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1926-1889) ஆகியோர் வரிசையில் அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் என்னும் ஆளுமையும் கவனிக்கப்பட வேண்டியவர் என்பதை இந்நூல் நமக்கு தெளிவாக அடையாளப்படுத்துகிறது