அமெரிக்க ஏகபோகத்தின் கைப்பாவைகளாகத் திகழும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை தங்களின் பிழைப்புக்காக வடக்கு நாடுகளின் தேக்கநிலையையும், தெற்கு நாடுகளின் வளரும் போக்கையும் காரணமாகக் காட்டி நம்மையெல்லாம் மகிழ்ச்சியுறச் செய்ய சில புதிய சொற்களைக்கொண்டு இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே சீனா, இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் போன்ற மக்கள்தொகையும் உள்நாட்டுச் சந்தையும் மிகுந்த நாடுகளை "வளரும் வல்லரசுகள்' என்றும் "தெற்கின் எழுச்சி' என்றும் மகுடம் சூட்டிவிட்டனர்.
இச்சொற்கள் இன்று தமிழ்நாட்டின் பட்டிமன்றப் பேச்சாகிப் பட்டிதொட்டிகளிலும் பாரதப் பெருமை பேசப்படுவதுண்டு. இது எந்த அளவுக்கு உண்மை? இப்படிப்பட்ட அடைமொழிகளுக்கு வலுவான காரணங்கள் உள்ளனவா? ஏன் இவ்வாறு பேசுகிறார்கள்? இப்படிப்பட்ட வளர்ச்சியை நம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலுமா? இது நீடிக்குமா ஆகிய கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவது இந்தியக் குடிமகனின் கடமையும்கூட.