ஆளப்பிறந்த மருது மைந்தன் எனும் நாவல் பதினெட்டம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு மலாயாவையும் மையமாகக் கொண்டு உருவாகப்பட்ட வரலாற்று நாவல் ஆகும். இந்நாவலசிரியர், வரலாற்றாசிரியர் பலரின் வரலாற்று நூல்களை மையமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்து இறுதி வாரிசைப் பற்றித் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை தக்க சான்றுகளுடன் சரியாக நிறுவியுள்ளார். தமிழகத்தில் வரலாற்றாசிரியர்களும் நாவலாசிரியர்களும் திரைப்படத்துறையினரும் சிவகங்கை சமஸ்தானத்தின் கடைசி வாரிசான இளவரசன் துரைசாமியும் மருது சகோதரர்களோடு சேர்த்துப் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அஃது உண்மையன்று என்பதனை இந்நாவலாசிரியர் சரியான வரலாற்று ஆவணங்களைக் கொண்டு நிறுவியுள்ளார். இளவரசன் துரைசாமியும் அவனைச் சார்ந்தவர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அன்றைய மலாயாவின் பினாங்கிற்கும் இந்தோனேஷியாவின் பெங்கூலானுக்கும் நாடுகடத்தப்பட்டதும் பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இளவரசன் துரைசாமி தாயகம் திரும்பி, இறந்ததுமான உண்மைச் செய்திகளை இந்நாவலின் கதையில் காட்டிச் சென்றுள்ளார். எனவே, உண்மை வரலாற்றுச் செய்திகளை மையமாகக்கொண்டு இந்நாவல் அமைக்கப்பட்டுள்ள திறம் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.