புராணக்காரர்கள், மனித சமூகம் நாகரிகத்திலே வளர்ச்சி யடைந்திருக்கிறது
என்பதைக் கூட ஒத்துக் கொள்வதில்லை. “பண்டைக்கால மக்கள்தாம் எல்லாவற்றிலும்
உயர்ந்த நிலை யில் இருந்தனர். இக்காலத்து மக்கள் தாழ்ந்த நிலையை அடைந்து
விட்டனர். பண்டைக்கால மக்கள்தாம் அறிஞர்களாகவும், ஆற்றல் உடையவர்களாகவும்,
இன்ப வாழ்வினராகவும் இருந்தனர். இக்கால மக்கள் இவைகளில் குறைந்துவிட்டனர்''
என்று கூறுவார்கள்.
இப்படிக் கூறுவது இயற்கைக்கு முரணாகும் என்பதே அறிஞர்கள்
கருத்து. வரலாறும் இதை மறுக்கிறது. இவ்வுண்மையை எடுத்துக் காட்டுவதே.
பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் என்னும் இப்புத்தகத்தின் நோக்கம். பல
துறைகளிலும் மக்கள் முன்னேறியிருக்கின்றனர் என்பதை இப்புத்தகத்தில் உள்ள
கட்டுரைகளால் காணலாம். இக்கட்டுரைகளைப் படிப்போர் வளர்வது தான் இயற்கை
என்பதை ஒப்புக் கொள்ளுவார்கள். வளர்வது இயற்கை என்பதை ஒப்புக்கொள்ளுவோர்
மேலும் மேலும் வளரத்தான் முயல்வார்கள் என்பது உண்மை . மக்கள் மனித வாழ்வின்
வளர்ச்சியை அறிந்து மேலும் வளர்வதற்கு எல்லாத் துறைகளிலும் முன்னேறுவதற்கு
முயல வேண்டும். இக்கருத்துடனேயே இப்புத்தகம் வெளிவருகின்றது.