பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இலர். ஒவ்வொரு துறையிலும் அவர் மிக முற்போக்கான கருத்துடையவர். மதத்துறையில் அவர் கருத்து மிக முற்போக்குடையது. 'எல்லா மதங்களும் ஒழிந்து தீரவேண்டும். மதம் மக்களுடைய அறிவைத் தடைப்படுத்தக் கூடாது. உரிமையைப் பறிமுதல் செய்யக்கூடாது. மதத்தின் மூலம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கு இடமிருக்கக் கூடாது. மக்களனைவரும் ஒன்றென்னும் உண்மை நிலவ வேண்டும். இவை வாயளவில் அல்லது நூலளவில் இருத்தல் போதாது. நடைமுறையில் இருக்க வேண்டும். இக்கொள்கைகளுக்கு ஆதரவு தருவது மதமாயினும் சரி, அல்லது அரசியல் ஆனாலும் சரி அல்லது வேறு எதுவானாலும் சரி, அவைகளை வரவேற்க வேண்டும்.'' இக்கருத்துப் பெரியாருக்கு உண்டு. தன் மதத்தில் வெறியும், பிற மதத்தில் வெறுப்பும் உடையவர்களுக்கு இக்கொள்கை நஞ்சாக இருக்கும். ஆதலால், பெரியாரை மதத்துரோகியென்றும், நாத்திகர் என்றும் தூற்றுவோர் ஒரு சிலர்.