"கொக்கரக்கோ.' - ஏழைகளின் இலவச அலாரம் கடிகாரமான எழில் சேவல் ஒன்று எங்கிருந்தோ எடுப்பான குரலில் கூவியது. ஏற்கனவே விழித்து விட்டாலும், அல்லி மொட்டுபோல அழகு விழிகள் மூடியபடி பாயில் படுத்திருந்த செந்தாமரை, அரும்பு மலர்ந்தது போல கண்களைத் திறந்தாள். பட்டுச் சிறகு அடித்துப் பறக்கும் சிட்டுக்குருவிபோல, அவள் உடனடியாக சுறு சுறுப்பாக வேலைகளில் ஈடுபட்டாள். பளிங்குப் பாவை போல படுத்திருந்த அவள் விருட்டென்று எழுந்து, முதலில் பாயை சுருட்டி வைத்தாள். அதே வேகத்தில் கொல்லைப்புறம் சென்றாள். அப்பொழுதுதான் அடிவானத்தில் ஆழ் துயில்கொண்டிருந்த ஆதவன், மெல்ல மெல்ல விழித்து எழுந்து கொண்டு இருந்தான். இளமங்கை ஒருத்தியின் கருங்கூந்தல் இடையே வெள்ளிக் கம்பி போல ஓரிரு நரை முடி தோன்றியது போன்று, சூரியனின் வெண்கதிர்கள் அப்பொழுதுதான் இருளை ஊடுருவிக் கொண்டு இருந்தன. மாமரத்தில் இருந்து குருவிகளின் "கீச் கீச்" குரல் கேட்டுக் கொண்டிருந்தது.