தினம் ஒரு திவ்ய பிரபந்த பாசுரம் என்கிற வகையிலே அனுபவிக்க இருக்கிறோம். இது ஒரு நெடிய பயணம். நாள் ஒரு பாசுரமாக, 4000 பாசுரங்களையும் அனுபவிக்க வேண்டும்; எவ்வளவு நாட்களாகும் / மாதங்களாகும் /வருடங்களாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். என்றாலும், நம்மால் முடிந்தவரை அனுபவிக்கலாம் என்றுதான் நாம் முடிவு செய்து ஆரம்பித்திருக்கிறோம். இந்தத் தொடர், பிரபந்தத்தில் மூழ்கி, படித்துத் தெரிந்த ப்ரபந்ந வித்துவான்களுக்கானதில்லை. இது அறிமுகத்தில் இருப்போருக்கானது. மிக எளிமையான முறையில் பாசுரங்களின் பொருளைச் சாமானியரும் அறிந்து கொள்ளும் வகையில் தருவதே இத் தொடரின் நோக்கம். இந்த விளக்கங்கள் பூர்வாசார்யார்கள் வழியில் இருந்தாலும் எளிமையாகத் தர முயற்சிக்கிறேன். இந்த நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை அருளியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். ஆழ்வார்கள் அவதாரம் எதற்காக? "பரித்ராணாயச் சாதூனாம் விநாசாயத சதுஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாயச் சம்பவாமி யுகே யுகே " சாதுக்களைக் காக்கவும் துஷ்டர்களை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் நான் அவதாரம் செய்கிறேன்