'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்றினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நவமணிகளாக 34 பாடல்களைத் தேர்ந்தெடுத்து மணி மாலையாக்கித் தந்திருக்கிறார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள். மென்மையும், வன்மையும், தண்மையும், திண்மையும் விரவி நடக்கும் வகையில் பாடல்களைத் தேர்ந்தெடுத்து சீர்பிரித்து எளிமைப்படுத்தி சிறுகதைபோல எடுத்துச் சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்நூல் 'இலக்கியச் சோலை' என்னும் பெயரில் பல்லாண்டுகளுக்கு முன் வெளியாகியுள்ளது.