இந்தியப் பெருவயிற்றில் இருந்து பாகிஸ்தான் எனும் முள்கிரீடத்தை அறுவை சிகிச்சை மூலம் குருதிப்பெருக்குடன் எடுத்துச் சென்ற ஜின்னா எனும் ஆளுமை துவங்கி, இம்ரான் கான் வரை, மாறி மாறி எல்லோர் தலையிலும் அதனை வைத்து ஒத்திகை பார்த்தாயிற்று. சீழ் பிடித்து வழியாத குறையாக சர்வதேச புருவச்சுளிப்புக்கு இந்த ஆளுமைகள் எல்லாம் இன்றுவரையிலும் ஆளாகிவருகிறார்கள் என்பது வரலாற்று உண்மை..! எக்காலமும் ஓயாத நில அதிர்வுப்பிரதேசம் போல் அதிகார அதிர்வுகளின் ரத்தக்களறியை இந்த ஆளுமைகளின் வரலாற்றில், நீக்கமற நம்மால் அறிய முடிகிறது..! படுகொலை, தூக்கு, நாடு கடத்தல், பதவிஇறக்கம், ஆட்சி மாற்றம் ஆகிய நகர்வுகள் சகுனியின் பகடைக்காய்களாக சதா உருட்டப்படும் தேசமாயிற்று பாகிஸ்தான்! விடியும் பொழுது "உதயம்" என்ற இயற்கையின் இலக்கணம் பொய்த்துப் போதல் என்பது குருதிக் களத்தில் மலர்ந்த பாகிஸ்தானுக்கு உரியதாயிற்று. உறங்கப் போகும் பிரதமர் விடியும்போது தான் பதவியில் இருப்பாரா உயிருடன் இருப்பாரா என்ற உத்தரவாதம் ஊமையாகிப்போன துர்பாக்கிய தேசம் இந்த பாகிஸ்தான்.. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் இன்றளவும் தீர்ந்தபாடாயில்லை....! பயங்கரவாத பசி, பகாசுரப் பசியாக பாகிஸ்தானை கர்ப்பத்திலிருந்தே துரத்தி வருகிறது... பாகிஸ்தான் அரசியல், "நித்திய கண்டம் பூர்ணாயுசாக" விமர்சனத்திற்கு உள்ளாகி இந்த ஆளுமைகளை எல்லாம் அடையாளம் தொலைந்துபோகச்செய்து கொண்டிருக்கிறதா என்ற ஆய்வுப் பார்வை, இந்நூல் வாசிப்பில் உங்களுக்கான வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்...!