மனிதன் வறியவனாய் வாழ்கிறான். ஆயின் நேர்மையானவனாய் இருக்க மட்டுமே போராடுகிறான். தான் வாழும் சமூகமோ அவனை விடாமல் துரத்துகிறது துன்ப வலைக்குள் தள்ளுகிறது. அவன் துயர் உறுவதுகண்டு கேலி பேசுகிறது. சமூகத்தின் அடித்தட்டில் வாழ்வோரும் பெண்டிரும் அனுபவிக்கும் துயர்கள் தொடர்கதையாகவே அரங்கேறுகின்றன. கஞ்சிகுடிப்பதற்கிலார்அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் எண்ணிக்கையோ குறைந்தபாடில்லை. படித்தவர்கள் பண்பாளர்களாய் வாழத்தான் பயிற்றுவிக்கப்படவில்லை.கற்றல் பொருள் ஈட்டலுக்கு மட்டுமே, பொருள் ஈட்டல் என்பது படாடோபமாய் வாழ்வதற்கு மட்டுமே என்கிற நியதியை குருதியில் ஏற்றிக்கொண்ட இளைஞர் சமுதாயம் கண்முன்னே உலா வருகிறது. ஒழுக்கம் சார்ந்த கல்வி பணிக்கலாசாரம் வாழ்க்கைமுறை அனைத்தும் எள்ளலுக்குறிய விஷயங்களாய் அனுபவமாகின்றன. இவைகட்கு இடை வாழும் எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் வலியும் வதையும் ரணமுமே சிறு கதைக்குக்கரு. அவை கொணரும் படைப்புகளே உங்களோடு.’