மார்க்ஸ் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட வருணிக்க முடியாத துன்ப, துயரங்களால் என்றுமே துவண்டவர் அல்ல. ஆனால், தன் அன்புத் துணைவியான ஜென்னியையும், தனக்குக் குழந்தைகளாகப் பிறந்து வறுமை காரணமாக உதிர்ந்த மலர்களையும் நினைத்து, ஒரே ஒரு முறை, தன் தோழர்களிடம், "மறுபிறவி, என்பதை நான் ஏற்றதே இல்லை. அது மூடநம்பிக்கை. ஆனால், இன்று காணப்படும், சுரண்டல் காரணமாக குற்றங்களே மிகுந்த இச்சமுதாய அமைப்பு நீடிக்குமானால், அதில் நான் மீண்டும் பிறக்க நேரிட்டால், கட்டாயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்றார்.
மாமனிதர் மார்க்சின் நெஞ்சில் பதிந்து புகைந்து கொண்டிருந்த தணியாத ஏக்கம், துக்கம், பீறிட்டு வருவதை உணர முடிகிறதல்லவா? அவற்றையும் பொருட்படுத்தாது தன் ஆயுளைப் பணயம் வைத்து, நமக்காக நம்மை விடுவிக்கக்கூடிய சர்வரோக சஞ்சீவியைத் தயாரித்துத் தந்துவிட்டு மறைந்துள்ளார். மார்க்ஸ், நோய்க்கான மூல காரணத்தை விஞ்ஞான வழியில் கண்டறிந்து கூறிவிட்டார்.