தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சிங்கனத்திற்கு மட்டுமல்ல பல்வேறு ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராகவே இருந்தது. தமிழர்கள் சிங்களர்களின் பேரினவாத அரசுக்கு இணையாக அரசியல் ஆற்றலாக வளர்ந்து நின்ற பொழுதில், நேரடியாக வீழ்த்தமுடியாத ஒரு அரசியலை கருத்தியலாக வீழ்த்துவதற்கும், தமிழீழத்தின் எதிரிகளை ஒன்றிணைக்கவும் பல்வேறு கருத்துருவாக்க அடியாட்கள் களத்தில் இறக்கப்பட்டார்கள். இவர்கள்து பணியானது. ஈழ அரசியலை ஆராய்ந்து அதன் அரசியல் அதிகாரமையங்களை சமரச அரசியலுக்கு கொண்டுவருவதும், சர்வதேசத்திற்கு ஈழ விடுதலை போராட்டத்தினைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து பயிற்றுவிப்பதும், ராணுவரீதியான முடிவினை இறுதியில் நியாயப்படுத்தி செயல்படுத்துவதுமாக கருத்தியல் அடியாள் வேலையை செய்வதாக இருந்தது. இன்றும் இருக்கிறது.
இதை திறம்பட செய்துகொண்டிருப்பவர்களில் மிக மிக முக்கியமான நிறுவனமாக தமிழர்கள் அறியவேண்டியது ‘இண்டர்நேசனல் க்ரைசிஸ்க்குப்’ எனப்படும் சர்வதேச சிக்கல்தீர்வு குழு. இது மனித உரிமை அமைப்பு போலவும், அதிகார தரகு நிறுவனம் போலவும், அறிவுசீவிகள் போலவும், அரசியல் தீர்வாளர்கள், அரசாங்க ஆலோசகர்கள் போலவும் பல்வேறு கருத்தியல் கட்டமைப்புகளை சர்வதேச மட்டத்திலும், களத்திலும் ஏற்படுத்தினார்கள். இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மறக்கக் கூடாத ஐ.சி.ஜி எனும் நிறுவனத்தையும், அவர்களது நடவடிக்கைகளையும் தமிழர்களிடத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் மே பதினேழு இயக்கம் ஒரு சிறு வெளியீட்டாக இதை கொண்டு வருகிறது. தமிழ்தேசிய போராட்டம் கூர்மையடையும் பொழுதில் இம்மாதிரியான கருத்துருவாக்க அடியாட்களை புரிந்து கொள்ள இந்த நூல் பயனுடையதாக அமையும் என நம்புகிறோம்.