கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான
பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ஜார் ஒழிக பட்டாளத்து வீடு தொகுப்பில்
பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும்,
அதே வேளையில் சில அம்சங்களிலும், சில கதைகளிலும் விலகி நிற்கிறது.
இத்தொகுப்பில் வரும் செவ்வாக்கியம், மரிய புஷ்பம் ஆகியோர் அவரது என்றுதானே
சொன்னார்கள் கவிதைத் தொகுப்பில் அதே பெயரில் வேறு கதைகளை சொல்கிறார்கள்.
இக்கட்டுரையில் பிரதானமாக ஜார் ஒழிக தொகுப்பை குறித்து மாத்திரமே
கவனப்படுத்த விரும்புகிறேன். சாமின் கதைசொல்லல் முறை பெரும்பாலும் ஒரு
நாட்டுப்புற கதைசொல்லியின் தன்மையைக் கொண்டது. அவரது கதைகளில் சம்பவங்கள்
விரிந்தும், தாவியும், விரைந்தும் செல்லும். காலத் தாவல்கள் இருக்கும்.
அரிதாகவே உரையாடல்கள் நிகழும், ஓரிரு கதைகளைத் தவிர. இத்தன்மையை அதன் முழு
வடிவத்தில் மூவிலேண்ட், மரிய புஷ்பம் இல்லம், செவ்வாக்கியம் ஆகிய கதைகளில்
காணலாம்.