"தெருமுனையில் வருஷமாய் கவிழ்ந்தே இருக்கும் பொது ஆட்டுரலை நல்லநாள், பெரியநாளுக்கென மலர்த்துகையில், திசைகளில் வெளிப்பட பொடிசுகள் ஓடிமிதிக்கும் அடர்நிறத்து பூரான்கள் நமது வாதைகளின் அடைசலா? அன்றி கொண்டாட்டத்தின் உயிர்ப்பசைவா? சாம்ராஜின் கவிதைகளை வாசிக்க நேர்பவர்களுக்கான இந்த தொந்தரவு குறித்து நாம் ஏன் கவலையுற வேண்டும்.
கனத்த தத்துவங்களும் கைவிட்ட ஓர் ஊழி பெருமழைக்கு ஒடுங்கி நிற்கையில் அவித்த கடலையோடு ஆவிப்பறக்க ஒரு குவளை தேநீரையும் நம்மிடம் பகிர்ந்து கொள்பவன் கண்களில் நம்பிக்கையின் நோய்த்தொற்று இல்லையென்பது ஆறுதலானது எனில் சாம்ராஜின் கவிதைகளும் ஆறுதலானவை தான், துயரம் எனில் அது துயரமும் தான். தமிழ்க்கவிதை பரப்பில் இட்டு நிரப்புதலுக்கான ஒரு வெற்றிடத்தை தேர்ந்து நகரும் சாம்ராஜின் பாசாங்கற்ற கவிதைகள் மிகுந்த நம்பிக்கைக்குரியன என்பதை சொல்லதான் வேண்டும்."