தமிழ் மொழி, இனம், சமூகம், கலை இலக்கிய அரசியல் தளங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் கொண்டு ஏராளப் படைப்பிலக்கியங்கள் தந்திட்ட தன்னிகரற்ற தமிழியல் ஆய்வாளரும் சமயம், சமூகம், மார்க்சியம் உள்ளிட்ட பல்துறைச் சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவுக்குப் பிறகு நூலாக்கம் பெறாத அவரது சில படைப்புகளே இந்நூல்.
தமிழில் சில இதழ்களில் பேராசிரியர் எழுதி வெளிவந்த, வெளிவராத கட்டுரைகள், அவரது உரைநிகழ்த்தல்கள், சில புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் மற்றும் பதிப்பாசிரியராக வெளியிட்ட நூலுக்கான பதிப்புரை என மொத்தம் 18 ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.