பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தனது பாடசாலைக் காலத்திலிருந்தே நடிப்பதில் தனது திறமைகளைக் காட்டி வந்துள்ளமை நன்கு புலனாகின்றது. இவர் ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்துள்ளார். கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியைக் கற்றபோதே பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் முதன்முதலாக வானோலி நிகழ்ச்சியில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
1953 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றார். அங்கு அவரது நாடகத் திறமைக்கு சிறந்த களம் காத்திருந்தது. எதிரிவீர சரத்சந்தர் 'மனமே' 'சிங்கபாகு' போன்ற புகழ் பெற்ற சிங்கள நாடகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த அதேகாலத்தில் பேராசிரரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களை பேராசிரியர் வித்தியானந்தன் தயாரித்துக்கொண்டிருந்தார். வானொலி நாடகத்தில் நன்கு அனுபவம் பெற்றிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்தார். 'உடையார் மிடுக்கு' என்ற நாடகத்தில் 'உடையார்' என்ற பாத்திரமேற்று நடித்தார். பின்னர் தவறான எண்ணம், சுந்தரம் எங்கே போன்ற நாடகங்களிலும் சில ஆங்கில நாடகங்களிலும் நடித்தார். தொடர்ந்து இலங்கயர்கோன் இயற்றிய 'விதானையார் வீட்டில்' என்னும் வானொலி நாடகத்தில் 'விதானையார்' பாத்திரமேற்று நடித்து தனது விசேட திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.