கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய வடிவேலு, விவேக் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர். அவர்களில் சிலரைப் பற்றிய சுவையான குறிப்புகளை இந்த நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் வி.ராமமூர்த்தி. நல்ல காமெடி நடிகராக, குணசித்திர நடிகராக, குறும்பு செய்யும் வில்லனாக பல வேடங்களில் தோன்றி நடித்த டி.எஸ்.துரைராஜ், சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் மாளிகை போன்ற சொந்த பங்களாவில் வசித்தார். இந்தியாவின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றை வாங்கி பயன்படுத்தினார். அவருக்கு உறவினர் பட்டாளம் உண்டு. அவரது வீட்டுக்கு எப்போது போனாலும், யாராவது புதிது புதிதாக உறவினர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். நகைச்சுவை நடிகர்களில் மதிப்பு மரியாதையுடன் வசதியாக வாழ்ந்தவர் டி.எஸ்.துரைராஜ். _ என்பது போன்ற, நகைச்சுவைக் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். 1945_ ஸ்ரீவள்ளி படம் வெளிவந்தது. யானையைக் கண்டு டி.ஆர்.ராமச்சந்திரன் பயந்து ஓடும் காட்சிகள், அந்தக் கால ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. இப்படம் வெளிவந்த காலகட்டத்தில், உலகப்போர் ஆரம்பமானதால், சென்னை மீது குண்டு விழும் என்ற பயம் மக்களிடையே எழுந்தது. அதனால், சென்னையிலிருந்த ஸ்டூடியோ காரைக்குடிக்கு மாற்றப்பட்டு, 1945ல் ஏவி.எம்.ஸ்டூடியோவாக நிறுவப்பட்டது. _ என்பது போன்ற தகவல்களுடன், வரலாற்று நிகழ்வுகளும் ஆங்காங்கே சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ள விதம் சிறப்பானது! நகைச்சுவை கலைஞர்கள் சிலரின் சினிமா அனுபவங்கள் எப்படி இருந்தன; அவர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடைய நாடகத்துறை அனுபவங்கள்; சினிமா வாய்ப்புக்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன; எந்தத் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்கள் என்பது போன்ற தகவல்கள் இந்த நூலில் நிறையவே உள்ளன.