ஏழு கட்டுரைகளால் அடர்ந்திருக்கிறது இந்நூலின் கனம். என்ன இருக்கிறது இந்த நூலில்? இது, படைப்பை இயற்றிய மூலநூல் ஆசிரியரே அதற்கான உரை மரபையும் தொடங்கி வைத்திருப்பதைக் குறித்து அலசுகின்றது. இந்தியக் கவிதையியலில் அணியிலக்கணக் கோட்பாட்டுக்கு அளப்பரிய கொடையாக விளங்கும் தொல்காப்பியம் எனும் செம்மாந்த இலக்கணத்தை இந்தியப் புலமை மரபு கண்டு கொள்ளாததை முனைப்புடன் வெளிக்காட்டுகிறது. மணிப்பிரவாள நடை பெரிதாகப் பேசப்படாத சூழலில், அதனுடைய அசைவுகள் பிடிபட்டு இங்கு அரங்கேற்றப்பட்டுள்ளன. திருக்குறள் என்ற பிரதி பன்முக இலக்கியப் பொருண்மையையும் அதன் தரத்தையும் வெளிக்கொணர்வதாக அமைகின்றது. இவற்றிற்காக எடுத்தாளப்பட்ட தரவுகள் பரந்துபட்ட இந்தியச் சிந்தனைப் புலத்தில் தேக்கமடைந்து படிந்துகிடந்தவற்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டவை. தமிழ்ப் படைப்பாக்கங்களில் கண்டுகொள்ளப்படாத, கவனம் செலுத்தப்படாத பரப்பை மையமிட்டே இந்த ஆக்கம் தன் குரலை இனிமையாகவும் மென்மையாகவும் செஞ்சுருட்டிப் பண்ணாக இசைத்திருக்கிறது.