இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40
கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும்
நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது.
படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும்
கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர்
எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப்
பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான
நூலாசிரியரின் தொடர்பு, அவர்களுடனான அனுபவங்களைச் சொல்லும் கட்டுரைகளும்
இடம் பெற்றுள்ளன.
"உன் கால் அதை எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள், என் மேல் போடாமல்
இருந்தால் சரி' இவ்வாறு கட்டுரைகளினூடே அவ்வப்போது மின்னல்வீச்சு போன்ற
சொற்றொடர்கள் பரவசப்படுத்துகின்றன."
நூலின் தலைப்பாக அமைந்திருக்கும் "விசும்பின் துளி' கட்டுரையில் நீரோடு
தொடர்புடைய பல சொற்களை விளக்குகிறார். மேகம், மழை, அருவி, ஆறு, பொய்கை,
வாவி, தடாகம், சுனை, ஊருணி, அகழி, ஊற்று, கிணறு, கேணி, நீராவி, ஏரி, கழி,
காயல்,கடல் என பல சொற்கள், பழந்தமிழிலக்கியங்களில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன
என்று விளக்குவது சிறப்பு.
நாஞ்சில் நாடனின் பதின்மூன்றாவது கட்டுரை நூலிது. இதிலடங்கும் நாற்பது
கட்டுரைகளும் சிறியதும் பெரியதுமாக 2014-2016 ஈராண்டுகளில் எழுதப்பெற்றவை.