குலை குலையாகக் கனிந்து ரசம் தளும்பும் குளிர்ந்த திராட்சைக் கொத்துக்களைக் கவிதைகளாகக் காணிக்கை வைத்திருக்கிறார் கவிஞர் சிதம்பரநாதன். கனிக் கொத்து என்றாலும் இது கவிஞரின் கன்னி அறுவடை முதல் கவிதைத் தொகுப்பு. ஆயினும் வியக்கத் தக்க முதிர்ச்சியும் அதிசயிக்க வைக்கும் கற்பனை வளமும், சிந்தனையிலாழ்த்தும் கருத்துச் செறிவும் இந்தக் கவிதைகளுக்கு வண்ணம் பூசி வடிவழகு தந்து கலையின் வார்ப்பாக மாயம் செய்துள்ளன.