இருபது முப்பது வருடங்களுக்கு
முந்தைய காலகட்டத்தில் ’திருநவேலி’ மக்களோடு கலந்துபோய்விட்ட, சமயங்களில்
இப்போதும் கூட கலைந்துபோகாமலிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களை அதன் இயல்பு
குலையாமல் எடுத்து வைக்கிறார் சுகா. திருநவேலி, துப்பு, பொங்கப்படி,
நட்சத்திரம் பார்த்தல், சில்வர் டோன்ஸ், கலர் போன்ற பதிவுகள் அப்படியானவை.
காலம் அடித்துச்சென்றுவிட்டவை என்ற சிறு பெருமூச்சோடு கடந்துபோய்விடக்கூடிய
பதிவாகவே பலவும் இருந்தாலும் அவற்றில் இருக்கும் அழுத்தம் அசாதாரணமானது.
’பாலாபிஷேக’த்தில் வரும் கல்யாணி ஆச்சி அவள் வாழ்நாள் முழுதும்
செய்துகொண்டிருந்த காரியம் பின்னெப்போதும், யாராலுமே செய்யமுடியாத காரியம்
என்பது நமக்கு உறைக்கையில் துணுக்குறாமல் இருக்கமுடியாது. எத்தனையோ
தலைமுறையாய் நடந்துகொண்டிருந்த வழக்கத்தின் கடைசி சாட்சி அவள். குருக்களையா
தாத்தா பூஜை செய்துவரும் ’உச்சிமாளி’ கோவிலின் பலிபீடத்தில் வைக்கப்படும்
நைவேத்தியத்தை உண்ணக்காத்திருக்கும் ‘ஜம்பு’ எனும் நாயின் பின்னணி
சுவாரசியமானது. ‘இருப்பு’ பதிவில் சுப்பிரமணி தாத்தா சிதையில்
எரிந்துகொண்டிருக்கையில் அவர் வயதையொத்த பெருமாள் பிள்ளையும், வெங்கடாசல
ரெட்டியாரும் பேசிக்கொள்வது அவர்களை நம் மண்ணின் மனிதர்கள் என்று
பெருமையோடு உரிமைகொண்டாட வைக்கிறது. ‘பந்தி’ நினைவுகள் சுகமானவை. அதிலும்
பணம் வசூலித்து மஹாதேவ அஷ்டமியன்று பஜனை மடத்தில் பிராமணர்கள் நடத்தும்
பந்தியும் அதற்கான காரணமும் ரசமானவை. சந்திராவின் சிரிப்பு, காதல் மன்னன்
போன்ற பதிவுகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை. இன்னும் எத்தனை எத்தனையோ
மனிதர்கள், நிகழ்வுகள். நெல்லை மண்ணை தம் பங்குக்கு அதன் மணம் மாறாமல்
சிறப்பாக பதித்திருக்கிறார் சுகா.