மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும் “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.
வில்லன்களைப் புகழும் சினிமாக்களைப் பார்த்திருப்பீர்கள். உண்மையிலேயே கதாநாயக அந்தஸ்துப் பெற்றிருந்தும், செம்மையான வாழ்வு அமைந்திருந்தும் கூடா எண்ணத்தினால் கேடு அடைகிறான் இராவணன். அதுவும் அவனாக அடைவதில்லை. அவன் சகோதரியாக இருக்கும் சூர்ப்பனகை தன் கணவனைத் தமையன் பொருட்டு இழந்த காரணத்தால் அவள் கோபத்தின் வழி இதெல்லாம் நேர்கிறது என்பது சுட்டப்படுகிறது.
அயோத்தி போல் இலங்கையின் வளமை, மயன் சமைத்த லோகம் , மேலும் ராமனுக்கு ஈடாக கம்பநாடன் இராவணனையும் கருதுகிறான் என இவ்வளவு பெருமைகள் பெற்றிருந்தும் என்ன, உளநலன் கெட்டதால் ஊறு விளைந்து அழிந்தானே என எண்ணும்போது நம்முள்ளும் அவலச் சுவை மிகுகிறது. ராவணன் பற்றிய ஒவ்வாத கருத்துக்கள் கொண்டிருந்தாலும் அந்த அவலச் சுவையை படிக்கும் ஒவ்வொருவரிடமும் உருவாக்குவதால் காப்பியத்தின் மேன்மை அதி உன்னதம் அடைகிறது.