எண்ணற்ற இலக்கியங்களும் வேண்டுமான அளவு இலக்கணங்களும் தமிழ்மொழியில் உள்ளன. முத்தமிழ் என்ற வழக்கு இடைக்காலத்தில் தோன்றியதற்கேற்ப இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் நூல்கள் பல்கி இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று இயல் துறையில் மட்டும் பழைய நூல்கள் கிடைக்கின்றனவே தவிர, ஏனைய இருதுறை களிலும் ஒரு பழைய நூலும் கிடைத்திலது. எனவே இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு பழந் தமிழில் எவ்வகை நூல்கள் இருந்தன. எவ்வகை நூல்கள் இல்லை என்று ஆராய்ந்து முடிவு கட்டுவது இயலாத காரியந்தான். ஆனாலும் பழைய தொல்காப்பியம் இலக்கணம் அமைக்கின்ற வகையை ஒட்டியும் இடைக்கால உரையாசிரியர்கள் தம் காலத்து இருந்தனவாகக் கூறுகின்ற நூல்களின் பெயர்கள், மேற்கோள்கள் முதலியவற்றை ஒட்டியும் ஒரு வகையான முடிவுக்கு வருதல் கூடும். எத்துணைத் துறைகளில் தமிழ் நூல்கள் பல்கி இருந்தபோதிலும் 'இலக்கியத் திறனாய்வுத் துறையில் தமிழ் நூல்கள் இல்லை என்று கூறினால் தவறில்லை என்றே தோன்றுகிறது. இவ்வாறு கூறுவதால் தமிழ் மொழியின் சிறப்புக் குறைந்து போனதாக யாரும் நினைத்துவிட வேண்டா.