அனுபவத்திற்கு வடிவு கொடுக்கும் திருவாசகப் பாடல்கள் ஒரு கோவையாக, ஒரு வரன்முறைக்கு உட்பட்டு வருமென்று சொல்வதற்கில்லை. கோவையும், வரன் முறையும் வேண்டுமானால், அங்கே அறிவு தொழிற்பட வேண்டும். அறிவு தொழிற்படத் தொடங்கினால், உணர்வு குறையத் தொடங்கிவிடும்.
இக்கருத்துக்களை மனத்தில் கொண்டு அடியையோ, சில அடிகளையோ அவ்வப்பொழுது படிக்கச் சொல்லிக் கேட்கும்போது என்ன சிந்தனைகள் மனத்தில் தோன்றினவோ அவையே இங்கு இடம் பெற்றுள்ளன. இச்சிந்தனைகள் என்னுடைய அறிவின் துணைகொண்டோ, அறுபது வருட இலக்கியப் பயிற்சியின் விளைவாகவோ’ தோன்றியவை அல்ல.
குலாப் பத்து முதல் அச்சோப் பதிகம் வரையான திருவாசகப் பாடல்கள் இந்த நிறைவுப் பகுதியில் இடம் பெறுகின்றன. வழக்கம்போல பின்னுரை இணைந்துள்ளது. நூல் முழுவதற்கும் இறுதிப்பகுதியாகச் சேர்க்கப்பெற்றுள்ளது.