பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை - - தேவதேவன் கவிதை எழுதும் ஒரு மனிதனும், அவன் புனை பெயரும். இது அவனது இருபத்தொன்பதாவது கவிதைத் தொகுப்பு. எளிமையான வாழ்(வு) உண்மைகள்தாம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். எளிமையான வாழ்வு என்கிற எதுவுமே சாதாரணமானதாக இருப்பதில்லை, கூர்ந்து பார்க்கிற விழிகளுக்கும், திறந்து கிடக்கிற இதயங்களுக்கும், இப்பார்வையே இவற்றை அரிதானவைகளாக்குகின்றன. குழந்தைப் பருவம். உலகத்தை மட்டுமே ஒரு தோட்டமாக அறிந்திருந்த அனுபவமுள்ள அவனுக்குக் கிட்டியது தனது சகோதரியின் சற்றே பணக்காரத் தோழியான ஜானகியக்காவின் வீடு, வெளிப் பார்வையை மறைக்கும் மரக் கதவுடைய கருங்கல் மதிலுக்குள்ளே, ஓடுகள் வேய்ந்த சுற்றும் நிறைய அறைகளிலிருந்த வீடு. அவன் கண்களை அகல விரித்த ஒரு பூந்தோட்டம். ஒன்றைவிட்டு ஒன்று சிறிதான மூன்று வட்டங்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கினாற் போன்ற மேடையில் சுற்றிச் சுற்றி வண்ண வண்ண மலர்களுடனிருந்த பூந்தொட்டிகள். அவன் சகோதரி, அவர் தோழி, அவன், மூவரும் ஓடிப் பிடித்து விளையாடுகையில் ஒருநாள் அவன் ஆடையைப் பிடித்து இழுத்து தானும் விழும்போல் அசைந்தாடிய ரோஜாச் செடியின் முட்கிளை... அறுபத்து நான்கு, அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஓர் அனுபவம் இன்றும் நெஞ்சில் அழியாது நிற்கிற ஒரு படிமம் என்றால் அதற்கு என்ன பொருள்?