க.நா.சு என்று அனைவராலும் அறியப்படும் க.நா.சுப்ரமண்யம் என்பதன் விரிவாக்கம் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். இவர் தன் விமர்சனங்களுக்காக அதிகமாக அறியப்பட்ட படைப்பாளர். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவர் 1912ஆம் ஆண்டில் சனவரி 31 இல், தஞ்சாவூரை அடுத்த சுவாமி மலையில் (வலங்கைமானியில்) பிறந்தவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமரிசனம் எனப் பல தளங்களில் தன் படைப்பாளுமையை வெளிப்படுத்தியர். ஐரோப்பிய படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச் செய்த பெருமை க.நா.சு வுக்கு உண்டு. க.நா.சு வின் படைப்புலகத்தை அவரின் நூல்களின் வழி வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் மையப்பொருளாகும். இருபதாம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்கள் இருந்தாலும் தன் படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விமரிசனங்கள் என அனைத்து தளத்திலும் சிறந்து விளங்கிய க.நா.சுப்ரமண்யத்தின் படைப்புலகத்தை அவரின் வாழ்வு மற்றும் படைப்பின் வழி காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.