"இப்புத்தகம் உண்மையிலேயே ஒரு மேதையின் படைப்பாகும். அரசியல் உலகம்
அனைத்தின் மீதும் வானத்திலிருந்து இடி விழுந்ததைப்போல தாக்கிய ஒரு சம்பவம்
நடைபெற்றது. சிலர் அந்த சம்பவத்தை தார்மீக ஆவேசத்தோடு உரத்தக் குரலில்
கண்டித்தனர்; வேறு சிலர் அது புரட்சியிலிருந்து தங்களைக் காத்தருளும்
என்றும் புரட்சியின் தவறுகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்றும் அதை
ஏற்றுக் கொண்டனர். எல்லோரும் அதைப் பார்த்து அதிசயித்தார்களே தவிர,
ஒருவர்கூட அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை ... பிரெஞ்சு வரலாற்றைப் பற்றி
மார்க்சின் முழுநிறைவான அறிவு தேவைப்பட்டது. வேறு எந்த நாட்டைக்
காட்டிலும் பிரான்சில்தான் வரலாற்று ரீதியான வர்க்கப் போராட்டங்கள் ஒவ்வொரு
தடவையும் ஒரு முடிவு ஏற்படுகிற அளவுக்கு நடைபெற்றிருக்கின்றன, அவை
நடைபெறுகின்ற, அவற்றின் முடிவு பொழித்துரைக்கப்படுகின்ற, மாற்றமடைகின்ற
அரசியல் வடிவம் மிகத் தெளிவான உருவரைகளால் முத்திரையிடப்படுகின்றன.”