உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் அழகோடு பேராசிரியர் எடுத்துரைக்கின்றார்.
மனிதன் பரிணாம வளர்ச்சியில் பெற்ற பெரும்பேறு அவனுடைய மூளையின் அளவும் கட்டமைப்பும் எனத் தெளிவு படுத்துகின்றார். காரண காரிய அறிவு விலங்குலகில் இல்லை; ஆனால் மனிதனுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடாகிறது. மனிதனின் கூரிய அறிவும் பண்பாட்டு உணர்வுகளும் எப்படி வளர்ந்தன என்பதை மணக்கும் தமிழில் மணி அவர்கள் முன் வைக்கின்றார்.